சொந்தக் காரணங்களுக்காக திருப்பத்தூர், திண்டிவனம், நெல்லூர் என்று 100-150 கி.மீ.க்கு அப்பாலிலிருந்து தினசரி வந்து போகும் தொழிலாளர்கள் அதிகம். வேலை நிறுத்தம் காரணமாக வர முடியாமல் போக நேரலாம் என்று அலுவலகத்திலேயே பெரும்பான்மையானோர் தங்கிவிட்டனர். திடீரென தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அலுவலக வாயிலில் கூடி கோஷம் எழுப்புவதும், வேலைக்கு வருபவர்களைத் தடுப்பதும், போலீஸ் வந்து அள்ளிக்கொண்டு போவதும் தினசரி வழமையாகிப் போனது.
சக தொழிலாளர் ஒருவரும் அவர் சகோதரர்கள் மூவரும் செங்கல்பட்டிலிருந்து தினசரி வந்து செல்பவர்கள். அவர்களும் அலுவலகத்தில் தங்கியவர்கள். நண்பர் மிக நேர்மையான திறமையான அலுவலர். அலுவலக நேரத்தில் சீட் தேய பணி செய்தும், பயண நேரத்தில் முடிக்க முடியும் என வீட்டுக்கு அள்ளிக் கொண்டு செல்பவர். அதிகாரிகளிடத்தில் மிக நல்ல பெயர் எடுத்தவர்.
வேலை நிறுத்த நாள் ஒன்றில் அமாவாசை வந்துவிட அலுவலக நேரத்துக்கு முன் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு, அருகிலிருந்த கோவிலுக்குச் சென்று, யாரோ ஒரு ஏழைக்கு காலை உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு அலுவலகம் செல்ல வருகையில் கதவடைப்பு போராட்டம் துவங்கிவிட்டிருந்தது. இத்தனைக்கும் அலுவலகத்துக்கும், கோவிலுக்கும் 50மீ தூரம் கூட இல்லை. நண்பர் பதைத்துப் போய் செய்வதறியாமல் நின்றிருக்க, பின்பக்கமிருந்து வந்த போலீஸ் கதற கதற இவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போனதால் பணி நீக்கம் செய்யப் பட்டார்.
வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து, பங்கேற்காதவர்களை ஊக்குவிக்கிறேன் என அரசுத் தரப்பு அவர்களின் பிள்ளைகளில் ஒருவருக்கு வேலை அல்லது அதற்குத் தகுதியற்றோருக்கு ஒரு இன்கிரிமெண்ட் என அறிவித்தது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டாலும், தேர்தல் சமயத்தில் ஒரு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் பழைய சர்வீஸ் கணக்கெடுக்கப் படாமல் புதியதாக பணி நியமனம் என்ற எலும்புத்துண்டு நீட்டப்பட்டது.
நண்பரும் அப்படி கிட்டத்தட்ட 25 வருட பணிமூப்பைத் துறந்து வேலைக்குச் சேர்ந்தார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், அவர்கள் தலைமையில் நடந்த போராட்டம் என்பதால் பழைய பணியும் வேலை நிறுத்ததில் பங்கேற்றவர்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படும். வேலை நிறுத்தக் காலம் மன்னிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நண்பரைத் தவிர அனைவரும் பயனடைந்தனர்.
காரணம் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கோவிலுக்கு சென்ற பாவம் (அலுவலக நேரத்துக்கு முன்பே) அலுவலகத்தில் முறைகேடாக கையெழுத்துப் போட்டுவிட்டு வேலை நிறுத்தத்திலும் பங்கேற்றமைக்காக பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்ட ஒரே நபர் இவர்.
அடுத்த 15 வருடங்கள் தினசரி நரகம் ஆனது அவர் வாழ்க்கை. அதிகாரிகள் தரப்பில் எவரும் இவருக்காக எதுவும் செய்ய முடியாது என்பது ஒருபுறமிருப்பினும், அதற்கு மேல் அவருக்காக பரிந்துரைக்கவோ மேல் முறையீட்டில் உதவவவோ எவருமில்லை என்பதே உண்மை. அழுது, கெஞ்சி அலுவலக நடைமுறையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனைக்கும் ஒரே பதில் முடியாது என்பதே.
இருந்த ஒரே வழி, முதல் குடிமகனின் மன்னிப்பு. தூக்கு தண்டனைக் கைதிகளின் கடைசி நம்பிக்கைத் துளியாக இருக்குமே அந்த ஒரு வழி. பணிமூப்புக்கு 3 மாதம் முன் நேர்மையா உழைச்சேன், நல்லகாரியம்னு சொன்னதை செய்தேன், எனக்கு இதுதானா வழியென்று அழுதபடியே தயங்கித் தயங்கி கையொப்பமிட்ட மனு, பத்து நிமிடத்தில் காமாட்சி அருளால் ஏற்கப்பட்டது.
சரி! இது உணர்த்துவது என்ன?
அ)தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் வெல்லுமா?
ஆ)15 வருஷமா சரியில்லாத கட்டம் ஏதோ ஒரு கட்டத்துல சரியானதா?
இ)நேரத்தோட ஆளு அம்பு தேடாம பொழைக்கத் தெரியாம இருந்து அவஸ்தைப்பட்டது அவர் தப்பு என்ற யதார்த்தமா?