கேரக்டர் -1

ரயில்வே ஸ்டேஷன் மாதிரி ஒரு அலுவலகத்தில் பணிபுரிவது மிகவும் சுவாரசியமான விடயம். மனுசப் பொறப்பில எத்தனை வகையுண்டோ அத்தனையும் காணக்கூடும். ஆஜானுபாகுவாய், அரட்டலான பேச்சுடன் மிரட்டும் மனிதர், ஏதோ ஒரு தவறுக்கு எக்ஸ்ப்ளனேஷன் மெமோ அல்லது ஒரு ‘என்னய்யா வேலை பார்க்கற’க்கு தேம்பித் தேம்பி அழுவார். இருக்கிற இடம் தெரியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஒரு ஜந்து எதற்கும் அஞ்சாமல் அலையவிட்டு வேடிக்கைப் பார்க்கும்.

நம் தோழர் இரண்டாவது ரகம். நெற்றியில் திருமண். முட்டிவரை ஏற்றிக்கட்டிய பஞ்சகச்சம். மேல்துண்டு போர்த்தியபடி கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருவார். அலுவலக வளாகத்துள் வந்ததும், மஞ்சள் பையில் சுருட்டி வைத்திருந்த சட்டையை போட்டுக் கொண்டு, மிலிட்டரிக்காரன் ரிப்பன் மாதிரி சிவப்பு, நீலம், கருப்பு பேனாக்களைச் சொருகிக் கொள்வார். மேல் துண்டை உதறி மடித்து பைக்குள் வைப்பார். பிறகு தன் அலுவலகம் நோக்கிப் போவார்.

மனுசனோட அலப்பறைக்கு முன்னால் வடிவேலு எல்லாம் காணாமல் போவார்கள். அலுவலகத்தில் கழிவாக பார்சல் வந்த மரப்பெட்டிகளை 5 ரூபாய்க்கு வாங்கி, தானே உடைத்து சும்மாடு கட்டி தலையில் வைத்துப் போக , ரிக்‌ஷாவில் போகலாமே என்று கரிசனப் பட்டவரிடம், அந்த 5 ரூ சேர்த்தா வீட்டருகில் விறகு வாங்க மாட்டேனா? உன்னை தூக்கிக் கொண்டு வரச் சொன்னேனா என்று ஒரு பிடி பிடிப்பார்.

ஆவடி அருகில் ஒரு அத்துவானக் காட்டில் யாருமே இல்லாத இடத்தில் ஒரு வீட்டைக் கட்டி குடிபோன 2ம் நாளே பக்கத்து சவுக்குக் காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதால் தன் உயிருக்கு ஆபத்து. போலீஸ் காவல் வேண்டும் என்று மனு கொடுத்து, வியாபாரி நம்ம ஆளை கிள்ளுக் கீரை என நினைத்து மிரட்ட, ஒரே ஒரு அடி தாங்க மாட்டேன். ஹார்ட் பேஷண்ட். உயிர் போயிடும். 

என் உசிருக்கு ஆபத்துன்னு எழுதிக் கொடுத்திருக்கேன். நான் தடுக்கி விழுந்து செத்தாலும் உன்னைத்தான் பிடிப்பாங்க என்றால் அந்தாள் என்ன செய்வார்? ஒண்ணும் தகராரில்லாம நான் பார்த்துக்கறேன் சாமி, பொழப்பில மண்ணைப் போடாதே என்று சரண்டராகிப் போன கதை பிரசித்தம்.

பெருமாள் கோவிலில் புத்தகம் வைத்துக் கொண்டு உபன்யாசம் செய்பவரிடம், பயபக்தியாக, அடியேன் விக்யாபனம். பகவான் கீதையில், என்று முழ நீளம் சம்ஸ்கிருதத்தில் ஸ்லோகம் சொல்லி, இதுக்கு அர்த்தம் என்ன என்று தேவரீர் விளக்கவேண்டும் என்பார். 

கண்கள் மேலே சொருக, வியர்த்து ஊத்த அது வந்து என்று தடுமாறி, தண்ணீர் குடித்து, கனைத்து ’இன்னைக்கு நான் அகப்பட்டேனா உனக்கு’ என்று ஹீனமாக பார்த்ததும் மடை திறந்தாற்போல் விளக்கம் சொல்லி, நான் புரிஞ்சிண்டது இப்படி. சரிதானா தேவரீர் சொல்லணும் என்றால் உபன்யாசம் செய்பவருக்கு சாஷ்டாங்கமாக காலில் விழத் தோணுமா தோணாதா?

எஞ்ஜினியரிங் பிரிவில் டிவிஷனல் அக்கவுண்டண்ட் என்ற பதவி எப்பொழுதும் கீரியும் பாம்பும் போல. கை சுத்தமில்லாவிடில் நாகமும் சாரையும் போல. பொதுவாக அப்படி போஸ்டிங் கிடைத்த அக்கவுண்டண்டை பாவப்பட்ட ஜன்மமாகத்தான் கருதுவார்கள். நம்ம ஆசாமிக்கு அப்படி போஸ்டிங் வந்ததும் எஞ்ஜினியருக்கு கட்டம் சரியில்லை என்று சிரித்தோம்.

அதுவும் புது அலுவலகம். அடுத்த நாள் திறப்பு விழா. தலைமை அதிகாரிகள் வர இருக்கிறார்கள். மொத்தமாக ஒரு 200 பேருக்கு மேல் வரக்கூடும் என்பதாலும், அதிகாரிகள் என்பதாலும் லட்டு, மிக்ஸர், டிகிரி காபிக்கு ஒரு சமையல்காரரை சொல்லி வைத்திருந்திருக்கிறார் எஞ்சினியர். நம்ம ஆசாமி, பஞ்சகச்சமும், மேல்துண்டுமாக வந்து அலுவலகத்தில் விசாரிக்க, எஞ்சினியர் ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் எனக் கை காட்டினார்கள்.

அய்யா போய் வணக்கம் சொன்னதும், என்னய்யா நல்லா செய்வியா? ஒரு குறை வரப்படாது எனக் கூற அதெல்லாம் ஒரு குறையும் இருக்காது சார், நீங்களே பார்ப்பீர்கள் என்று சொல்லி இருக்கிறார். இப்படி நோஞ்சானாக ஒன்று என்ன செய்ய முடியும் என்று அதிகாரி சொறிந்தபடி, என்னய்யா நீ மட்டும் வந்திருக்கா? அடுப்பு, கரண்டி ஒண்ணும் காணோம். இங்க வாடகைக்கு வாங்குவியா எனக் கேட்க பிடித்தது சனி.

ஆங்கிலத்தில் என்னல்லாம் மேற்கோள் உண்டோ அத்தனையும் சொல்லி, உருவத்தைப் பார்த்து சமையல்காரன் என்று நினைத்த மாபெரும் குற்றத்துக்கு அடுத்த நாள் அதிகாரிகள் முன்னிலையில் நாட்டாமை என டரியலாக்கி, எல்லாரும் குறைந்த பட்சம் ஒன்றறை வருடங்களாவது குப்பை கொட்ட வேண்டிய அலுவலகத்தில் மூன்றே மாதத்தில் எங்களுக்கு அக்கவுண்டண்டே வேண்டாம் எனக் கதறலோடு திருப்பி அனுப்ப வைத்தவர்.

ரிட்டையர் ஆகும் அன்று மேலதிகாரியைச் சந்தித்து,  தன்னைப் போல் சட்டம் தெரிந்த, ரூல்சை கரைத்துக் குடித்த, எத்தனை பிரிவு உண்டோ அத்தனையிலும் வேலை செய்த (யப்பா..இந்தாளோட முடியல சாமி..மாத்திடுங்கன்னு கதறி கதறி எங்கேயும் 6 மாதத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் செக்‌ஷன் செக்‌ஷனாக மாற்றப்பட்டார்) தன்னை பரீட்சையில் தேறாமல் செய்து மார்க் கொடுக்காத அதிகாரிகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று பரிதாபப்பட்டதை பெருமையாகச் சொல்லி, அனைவருக்கும் ஆசி கூறி சட்டை பட்டனை அவிழ்த்தபடி நடந்தார் அவர்.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s


Follow

Get every new post delivered to your Inbox.